Tuesday, July 17, 2018

Get Defeat

எழுதியது யாருனு தெரியலை...

படித்ததில் பிடித்தது ........

தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.

ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.

ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.

மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.

ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.

அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.

அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.

அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார்.

“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.

அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.

அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.

அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.

அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.

மறுநாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.

இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.

அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.

முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.

யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.

ஆனால், அப்பாக்கள் வரம்.

*தாயிடம் நிரூபியுங்கள்*-* கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

*தந்தையிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

*மனைவியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.

*சகோதரனிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.

*சகோதரியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று

*மகனிடம் நிரூபியுங்கள்* -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று

*மகளிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று

வேறு எவருக்கு நீங்கள்  எதை நிரூபித்தாலும் *அது கடலில் கொட்டிய பெருங்காயமே*.

தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?
✌ *அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..*
✌ *அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..*
✌ *துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..*
✌ *பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..*
✌ *சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..*
✌ *நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..*
✌ *ஆகவே தோற்று போ,*
தோற்று போனால் வெற்றி கிடைக்கும்
🙏 அன்புடன் வாழுங்கள்.மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்..

Sunday, July 1, 2018

Water Poori

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி!

விளம்பரங்களில், `புஸ்ஸ்ஸ்ஸ்...’ எனப் பொங்கி வரும் பூரியைப் பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று நமக்குத் தோன்றும். ஆனால், அதைத் தயாரிப்பதற்குத் தேவைப்படும் எண்ணெயைப் பார்த்தால், உடல் எடை, சர்க்கரை நோய், கொழுப்புச்சத்து போன்ற பல உபாதைகள் நினைவுக்கு வந்து, `எங்களுக்குப் பூரியே வேண்டாம்’ என்று சொல்லத் தோன்றும்.

``எண்ணெய்க்குப் பதிலாக தண்ணீரில் ஹெல்த்தியான பூரியைச் சுடலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நிச்சயம் முடியும். அதிலும் அந்த பூரி நம் உடல் எடையைக் குறைக்க உதவுவது, சர்க்கரைநோயைக் குணப்படுத்துவது எனப் பல நன்மைகளைச் செய்யும்’’  தண்ணீரில் பூரி தயாரிக்கும் முறையையும் அது தரும் பலன்களும்....

தேவையானவை: (நான்கு நபர்களுக்கு):

கோதுமை மாவு / ராகி மாவு / கம்பு மாவு / சத்துமாவு (ஏதேனும் ஒன்று) - 150 கிராம்
காய்கறிச் சாறு / கீரைச் சாறு / மூலிகைச் சாறு (ஏதேனும் ஒன்று) - 50 கிராம்
இந்துப்பு / கறுப்பு உப்பு / எலுமிச்சைச் சாறு / நெல்லிப்பொடி (ஏதேனும் ஒன்று) - தேவையான அளவு
தேங்காய்த் துருவல் - அரை மூடி அல்லது முளைதானியப் பால் - தேவையான அளவு.
உலர் பழங்கள் / கரும்பு வெல்லத்தூள் / பனை வெல்லத்தூள் / தேன் / பேரீச்சை துண்டுகள் (ஏதேனும் ஒன்று) - 100 முதல் 150 கிராம் வரை (அல்லது)  கூட்டு / பொரியல் / சட்னி வகை / தக்காளி குருமா (ஏதேனும் ஒன்று) - 200 கிராம்5 லிட்டர் கடாய் அல்லது அகன்ற பாத்திரம் - 1
ஜல்லிக்கரண்டி / கண் கரண்டி - 1

மாவு பிசையும் முறை :

நம்மில் பலர் சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும்போது சிறிது சமையல் எண்ணெய் கலந்து பாலில், தண்ணீரில் கோதுமை மாவு / அல்லது மைதா மாவு போட்டு தயாரிப்பார்கள். அதற்குப் பதிலாக இங்கு நாம் காய்கறிச்சாறுகளாக வெண்பூசணிச் சாறு / கேரட் சாறு / தக்காளிச் சாறு / பசலைக்கீரைச் சாறு / வெந்தயக்கீரைச் சாறு / அரைக்கீரைச் சாறு / மணத்தக்காளிச் சாறு / பூண்டுச் சாறு / வல்லாரைச் சாறு இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கலந்து சிறிது நீர்விட்டு நன்றாகப் பிசையவும். அதோடு கெட்டித் தேங்காய்ப் பால் அல்லது முளைதானியப் பாலைவிட்டு பிசைந்துகொள்ளவும்.

கடல் உப்புக்குப் பதிலாக இந்துப்பு / கறுப்பு உப்பு / எலுமிச்சைச் சாறு / நெல்லிப்பொடி இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சேர்த்துக்கொள்வதால் சோடியத்துக்குப் பதிலாக பொட்டாசியம் கிடைக்கும்.

பிசைந்த மாவை பூரிக்கட்டையில் வட்டமாகத் தேய்க்கவேண்டும்

(மைதாவை இதனுடன் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்).

செய்முறை:

பொதுவாக நாம் உருட்டிய மாவை, கொதிநிலையில் இருக்கும் எண்ணெயில் அழுத்திப் பொரித்து எடுப்போம். ஆனால் எண்ணெய்க்குப் பதிலாக இங்கு நாம் தண்ணீரை உபயோகிக்கிறோம். 

5 லிட்டர் கடாய் அல்லது வாய் அகன்ற பாத்திரத்தில் 3/4 பாகம் நீர்விட்டு நன்றாகக் கொதிக்கவிட வேண்டும்.

கரண்டியில் உருட்டித் தேய்த்த மாவை வைத்து கொதிநீரில் ஜல்லிக்கரண்டியுடன் இறக்கி இரண்டு நிமிடம் நீரில் வேகவைத்து அப்படியே, கரண்டியுடன் வெளியே எடுத்துவிட வேண்டும்.

* தண்ணீர் கொதிநிலையில் இருக்கும்போது மட்டுமே மாவு வேகும்; பூரிப் பதத்துக்கு வரும்.

* கேரட் சாறு, தக்காளிச் சாறு ஆகியவற்றில் செய்தால் மாவு சிவப்பாகவும், கீரைச் சாற்றில் செய்தால் மாவு பச்சையாகவும் இருக்கும்.

* தேங்காய்த் துருவலை சமைக்காமல் பயன்படுத்துவதால், கொலஸ்ட்ரால் தொல்லையும் இல்லை.

* இதை தக்காளி தொக்கு, விதவிதமான சட்னி, கூட்டு, பொரியல் ஏதாவது ஒன்றுடன் சாப்பிடலாம். அல்லது உலர் பழங்கள், பனை வெல்லத்தூள், கரும்பு வெல்லத்தூள், பேரீச்சை மற்றும் தேன் தடவியும் சாப்பிடலாம். வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்து சாப்பிடலாம்.

பலன்கள்:

* ஒரு சொட்டு எண்ணெய் இல்லாத இந்த உணவு உடலுக்கு பல வகைகளில் நன்மையளிக்கிறது.

* உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீங்கும்.

* தொப்பை மற்றும் எடை குறையும்.

* சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு. இதனுடன் இனிப்பான பொருட்களைச் சேர்க்காமல் சாப்பிட முடியும். காய்கறி / கீரை சேர்த்து மாவு பிசைவதால் அதன் சுவையே போதுமானது.

* மற்ற பூரியைவிட தண்ணீர் பூரி அளவான கலோரி உடையது என்பதால், ஒரு வேளைக்கு 5 முதல் 8 பூரி வரை சாப்பிடலாம். ஒரு வேளை முழு உணவாகவும் இதனைச் சாப்பிடலாம். (ஒரு செட் தண்ணீர் பூரியின் கலோரி = 120)

* இந்த உணவில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், செரிமானக் கோளாறு வராமல் நம்மைப் பாதுகாக்கும். அத்துடன் அல்சர் போன்ற நோயையும் குணப்படுத்தும்.

* தினமும் ஒரு வகையான மாவுடன் ஒரு வகையான கீரைச் சாறு, காய்கறிச் சாறுடன் கலந்து சாப்பிடலாம். உதாரணமாகத் முடக்கத்தான் கலந்து சாப்பிட்டால் மூட்டுவலி, வாயுப் பொருமல் இல்லாமல் இருக்கும். ராகி மாவில் வெண்பூசணிச் சாற்றை கலந்து சாப்பிட்டால் தொப்பை குறையும், சர்க்கரைநோய் நீங்கும்.